Take a fresh look at your lifestyle.

“இயக்குநருக்கு கதைப்பற்றும் , கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை !”

பார்க்' திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு கலகலப்பு + பரபரப்பு பேச்சு !!"

176

அக்ஷயா மூவி மேக்கர்ஸ்’ சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (15-07-2024) மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா .. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசியதாவது.,

“இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார். சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப்பற்றி ஏதும் நினைத்ததில்லை.
அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் , அவர் என்னைத்தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாக ஒரு கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் படம் செய்யலாம் என்றேன்.
“படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்”. அது எனக்குப் பிடித்தது , படம் எடுக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்.

இணைத் தயாரிப்பாளர் ந. ராசா பேசும்போது.,

“பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு , பாடல் ஆசிரியராகும் ஆசை இருந்தது. இந்தப்பட இயக்குநர் முருகன் அறிமுகத்தில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் பாடல் எழுதி விட்டேன்.இது மூன்றாவது படம். இதில் நம் இந்தக் காலத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸப்… காலத்து இளைஞர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளைப் போட்டுப் பாடல் எழுதி இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,

” இந்த ‘பார்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை விரட்ட அனைத்து மதத்து சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண நபர் மூலம், அதுவும் சாலையில் செல்லும் ஒரு நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன். அந்த உத்தி தான் தயாரிப்பாளரை கவர்ந்தது.
முதலில் இதே தயாரிப்பாளரை வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன் அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது. அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம்.இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.

இப்பட நடிகை ஸ்வேதா டோரத்தி பேசும் போது,

” அண்மையில் வெளியான ‘லாந்தர்’ படத்துக்குப் பிறகு விரைவிலேயே இந்த ‘பார்க்’ படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.பார்க் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.

கதாநாயகன் தமன் குமார் பேசும் போது.,

“இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகிவிடுவார். படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார் .அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .’ஒரு நொடி’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் இரண்டிலும் நாயகராக நடித்தேன்.
இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது. படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள்.
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும்” என்றார்.

இவர்களை தொடர்ந்து ., சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான
இயக்குநர் பேரரசு பேசும்போது.,

“இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு… என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு… என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.

சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்” என்றார் .

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர் /நடிகர்கள் ஆர்.வி.உதயகுமார் ,சிங்கம் புலி , சரவண சுப்பையா ஆகியோரும் சிறப்பாக சிரிப்பாக பேசினர் . அதே போன்று இப்படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன்,நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் இப்படம் வெள்ளித்திரைக்கு விஜயம் செய்ய இருக்கிறது.